செம்மர கடத்தல்: தொடரும் அட்டூழியம்! மேலும் 18 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா!
செம்மரம் வெட்ட சென்றதாக மேலும் 18 தமிழரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தூர்: செம்மரக் கடத்தல் வழக்கில் 22 பேரை விடுதலை செய்த கையோடு அடுத்தடுத்து தமிழர்களை கைது செய்து வெறியாட்டம் போடுகிறது ஆந்திரா. இன்றும் 18 தமிழர்கள் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திரா கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக வழக்குப்பதிவு செய்த அம்மாநில போலீசார் அவர்களை சித்தூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு படிப்படியாக ஜாமீன் வழங்கிய திருப்பதி நீதிமன்றம் நேற்று பொன்னுசாமி என்பவரை தவிர மற்ற 22 தமிழர்களை ஜாமீனில் விடுவித்தது. அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குள் கடப்பாவில் மேலும் 35 தமிழர்களை நேற்று கைது செய்தது ஆந்திர போலீஸ்.
அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இன்று கடப்பாவில் மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆந்திரா போலீஸின் தொடரும் அட்டூழியம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.