அந்தோ பரிதாபம்: மகாராஷ்டிராவில் ரத்தம் மூலம் 182 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு
மும்பை: கடந்த ஒன்றரை ஆண்டில் மகாராஷ்டிராவில் 182 பேருக்கு ரத்தம் மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றை ஆண்டில் ரத்தம் ஏற்றியதன் மூலம் நாடு முழுவதும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியானது. மகாராஷ்டிராவில் மட்டும் 276 பேருக்கு ரத்தம் மூலம் ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரகாஷ் கஜ்பியே சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சாவந்த் கூறுகையில்,
கவுன்சிலிங் மையங்களுக்கு வந்தவர்கள் தெரிவித்ததை வைத்து தான் அந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தவறான முறையில் நடந்து கொண்டதால் ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது என்று கூற அஞ்சி சிலர் ரத்தம் ஏற்றியபோது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
இது குறித்து ரத்த வங்கிகளிடம் இருந்து தகவல் பெற்ற பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மகாராஷ்டிராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரத்தம் மூலம் 182 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.