போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேர் அரசுப் பணி: அமைச்சர் தகவல்
போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுத் துறைகளில் வேலைப் பெற்றுள்ளனர் என மக்களவையில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுத் துறைகளில் வேலைப் பெற்றுள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் சாதித் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய அமைச்சர் ஜிந்தேந்தர் சிங் பதிலளித்துள்ளார். அதில், 1,832 போலிச் சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு 1,200 வேலை வாய்ப்புகளை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பெற்றுள்ளதாகவும், 2010 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்டவர் பட்டியலில் உள்ள சாதியினரின் பெயர்களில் இந்தப் போலி சாதிச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதில் 276 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் 521 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1,035 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலிச் சாதிச் சான்றிதழ் மூலமாக நிதித்துறை சேவைகள் துறையின் கீழ் 1,296 பேர் வேலைப் பெற்றுள்ளனர். வங்கிகளைப் பொறுத்தவரை 157 பாரத ஸ்டேட் வங்கியிலும், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 135 பேரும், இந்திய ஓவர்சிஸ் வங்கியில் 112 பேரும், சிண்டிகேட் வங்கியில் 103 பேரும் வேலைப் பெற்றுள்ளனர்.
காப்பீடு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்சிலும், யுனைடெட் இந்தியா அஷ்யூரென்ஸ்சிலும் முறையே 41 பேர் வேலைப் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.