குஜராத்தின் கிர் சோம்நாத்தில் 19 முறை லேசான நில அதிர்வு
சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 19 முறை லேசான நில அதிர்வுகள் அடுத்தடுத்து உணரப்பட்டன. ரிக்டரில் இந்த நில அதிர்வானது அதிகபட்சம் 3.3 அலகுகளாக பதிவாகி இருந்தது.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.42 மணியில் இருந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. குறைந்தபட்சமாக ரிக்டரில் 1.7 அலகுகளாகவும் அதிகபட்சம் 3.3 அலகுகளாகவும் பதிவாகி இருந்தது.
மிக அதிகபட்சமாக காலை 3.46 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வானது 3.3 என ரிக்டரில் பதிவாகி இருந்தது. கடைசியாக 9.26 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது 3.2 அலகுகளாக பதிவாகி இருந்தது.
இந்த அடுத்தடுத்த நில அதிர்வுகளால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. அண்மையில் போர்பந்தர் மாவட்டத்திலும் இதேபோல் அடுத்தடுத்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பருவமழை காலத்தில் இதுபோல நில அதிர்வுகள் ஏற்படும் என்றும் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.