மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடியாது.. ஏன் தெரியுமா?
மும்பை: மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுவெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் யாகூப் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட மொத்தம் 100 பேருக்கு கடந்த 2006ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிழலுலக தாதா அபு சலீம், முஸ்தபா தோசா, பெராஸ்கான், தாகீர் மெர்சன்ட், ரியாஷ் சித்திக், அப்துல் கய்யம் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிமன்றம் தீர்ப்பு
இவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அப்துல கய்யம் தவிர்த்த அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
குற்றவாளி
ஆயுதங்களை கடத்தி வந்ததாக அபு சலீம் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி அறிவித்தார்.
நாடு கடத்தல்
மும்பை குண்டு வெடிப்புலும், திரைப்பட இசையமைப்பாளர் குல்ஷன் குமார் கொலையிலும் தொடர்புடையவராக குற்றம் சாற்றப்பட்டுள்ள அபு சலீமை போர்ச்சுகல் நாட்டு காவல் துறையினரும், சர்வதேச காவல் துறையினரும் 2002ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரில் கைது செய்தனர். இந்தியாவில் அவர் மீதுள்ள வழக்குகளில் விசாரிக்க சிபிஐ மனு செய்து, அபு சலீமை இந்தியா கொண்டு வரும் உத்தரவைப் பெற்றது.
மரண தண்டனை கூடாது
மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக அபு சலீமிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என இந்திய போர்ச்சுக்கலிடம் அனுமதி பெற்று 2005ல் இந்தியா கொண்டுவந்தனர். போர்ச்சுக்கல் நாட்டுடன் போட்டுள்ள ஒப்பந்தப்படி, அபு சலீமுக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்க முடியாது. போர்ச்சுக்கலில் நடைபெறும் விசாரணைக்கு அபு சலீம் உயிரோடு வேண்டும் என்பது நிபந்தனை. எனவே திங்கள்கிழமை நீதிபதி வழங்க உள்ள தண்டனை விவரத்தின்போது அபு சலீமுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவது சந்தேகமாகும்.