மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத்தின் 'வலதுகரம்' யேடா யாகூப்' பாகிஸ்தானில் மரணம்
டெல்லி: 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான யாகூப் வாலி முகமது கான் என்ற யாடே யாகூப் பாகிஸ்தானின் கராச்சியில் இன்று மரணமடைந்தான். இவன் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வலது கரமாக செயல்பட்டவன்.
1993ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை நிர்மூலமாக்கும் வகையில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கியவாளிகளான தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் உள்ளிட்டோர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கின்றனர். இந்த வழக்கில் பிடிபட்ட குற்றவாளி யாகூப் மேமன் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்ன்.
இந்நிலையில் இந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனும் தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாக செயல்பட்டவனுமாகிய யாகூப் வாலி முகமது கான் என்ற யாடே யாகூப் பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியிருந்த நிலையில் இன்று மரணமடைந்தான். அவன் மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, சில தகவல்கள் யாகூப்பின் மரணத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றன என்றார்.
இந்த யாகூப்பின் இரண்டு மகன்கள் அனீஸ் மற்றும் இம்ரான் ஆகியோர் மும்பையில் சட்டவிரோதமான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப்பின் மனைவியும் மும்பையில்தான் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.