மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு: அபு சலீம் உட்பட 6 பேர் குற்றவாளிகள், ஒருவர் விடுதலை!
மும்பை : 1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பையில் உள்ள பயங்கரவாதம் மற்றும் சீர்குலைப்பு செயல்கள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் (தடா நீதிமன்றம்) விசாரித்து வந்தது.
2006 ம் ஆண்டு முக்கிய விசாரணை நிறைவு பெற்று 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 2003 முதல் 2010 ம் ஆண்டு வரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது.
குண்டுவெடிப்பு நடைபெற்று சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் இன்று 7 பேர் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட பிரபல நிழலுலக தாதா அபு சலீம், தாகிர் மெர்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான், தாவூத் கூட்டாளி முஸ்தபா தோஸ்சா, கரிமுல்லா ஷெய்க், ரியாஸ் சித்திக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். சதி திட்டம், கொலை உள்ளிட்ட செயல்களுக்காக இந்திய தண்டனை சட்டம், தடா, வெடிகுண்டு ஆயுத தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் அனைவர் மீதும், நாட்டுக்கு எதிரான போர் என்ற குற்றப்பிரிவின்கீழ் தண்டனை வழங்கப்படவில்லை. அந்த தண்டனை பிரிவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.
தகுதிந்த ஆதாரம் இல்லை என கூறி, குற்றம்சாட்டப்பட்டிருந்த அப்துல் கய்யாம் ஷெயிக் என்பவரை விடுதலை செய்துள்ளார் நீதிபதி. இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், டைகர் மேமுன் உட்பட மேலும் 33 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.