2000 ரூபாய் நோட்டுகளில் நவீன டெக்னாலஜி "ஜிபிஎஸ்" நானோ சிப் பொருத்தப்படவில்லை: ரிசர்வ் பேங்க்
புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் ஜி.பி.எஸ்.நானோ சிப் எதுவும் பொருத்தப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
மும்பை: புதிதாக வெளியாகியுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் 'மைக்ரோ நனோ சிப்' போன்ற நுண் சாதனங்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
பணப் பதுக்கலை தடுப்பதற்காகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதன்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவித்த அவர், வியாழக்கிழமை முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய 500, 2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய மைக்ரோ நானோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியாகும் முன்பிருந்தே இதுபோன்ற தகவல்கள் பரவின.
நவீன தொழில்நுட்பம் மூலம், ரூபாய் நோட்டுகள் இருக்குமிடத்தை, பூமிக்கு அடியில் 120 மீட்டர் ஆழத்தில் பதுக்கி வைத்தாலும் கண்டுபிடித்துவிடலாம் என்ற ரீதியில் தகவல்கள் உலாவின.இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் இதுதொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவலா கூறுகையில், உலகில் எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பமே நடைமுறையில் இல்லைஎன்றும், எனவே நம் நாட்டிலும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.