குஜராத் தேர்தல் வருது பின்னே... ஜெட்லி அறிவிப்பு வந்தது முன்னே...
குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதில், ரூ.1,35,00 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலமாகவும், ரூ.76,000 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமும் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் 83,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 14.2 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எல்லாமே குஜராத், இமாசல பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கவனித்தில் கொண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 24ஆம் தேதியில் நடந்தது. அக்கூட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், வங்கித் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வங்கித்துறை வளர்ச்சி
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கித் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும் என்றார்.
சிறு குறு தொழில்துறை
முதலீடுகளைப் பொறுத்தவரை சிறு, குறு தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், அந்த துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 2008 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் கண்மூடித்தனமாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.76,000 லட்சம் கோடி பட்ஜெட்
அடுத்த சில மாதங்களில் வங்கிகளுக்கான சீர்திருத்தங்களை வெளியிட உள்ளோம். பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதில், ரூ.1,35,00 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலமாகவும், ரூ.76,000 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமும் அளிக்கப்படும்.
5 ஆண்டுகளில் சாலைகள் மேம்பாடு
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.6.92 லட்சம் கோடி செலவில் 83 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அருண் ஜெட்லி கூறினார்.
நெடுஞ்சாலை திட்டங்கள்
நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.7 லட்சம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. 'பாரத் மாலா' திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 20,000 கி.மீ சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு இந்தத் தொகையை ஒதுக்கி இருக்கிறது.
இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 83,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 14.2 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.