புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்
டேராடூன்: மகா கும்பமேளா நடைபெறும் ஹரித்துவாரில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா காரணமாகக் கும்பமேளா நடைபெறுமா என்ற கேள்வி நிலவியது.
இருப்பினும், கொரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு கும்பமேளாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்திருந்தது.
2 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு
ஹரித்துவாருக்கு வரும் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம். நேற்று புனித நீராடும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், நேற்று மட்டும் 525 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஹரித்துவாரில் 2,167 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகா கும்பேளா புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரிசோதனை கட்டுப்பாடு
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கும்பமேளாவில் அதிக பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் ஹரித்துவாரில் தினசரி 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் உத்தரகண்ட் சுகாதாரத் துறைச் செயலர் அமித் நேகி நீதிமன்றத்தில் கூறுகையில், புனித நீராட்டம் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
கோரிக்கை
மேலும், கும்பமேளாவில் கலந்துகொள்பவர்கள் மாநிலத்தில் அதிக நாட்கள் இருப்பதில்லை. அவர்கள் சில மணி நேரங்களில் நகரைவிட்டு வெளியேறிவிடுகின்றனர். இதனால் தினசரி 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடிவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் தினசரி 50 ஆயிரம் கொரோனா பாதிப்பு என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
பக்தர்கள் குறைவு
கங்கை கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் புனிக நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 32 லட்சம் பேர் கலந்து கொண்டர். ஆனால் நேற்று நடைபெற்ற இரண்டாவது புனித நீராடும் நிகழ்வில் ஒன்பது லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், கும்பமேளா நடைபெறும் நாட்களைக் குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் திட்டமிட்டபடி கும்பமேளா வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் தெரிவித்தார்.
கொரோனா விதிகள்
கும்பமேளாவில் கலந்துகொள்பவர்கள் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் யாரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை என்றும் மாஸ்க்குகளையும் அணிவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.