ஜம்ஷெட்பூரில் அல் கொய்தா ஸ்லீப்பர் செல்லை சேர்ந்த 2 பேர் கைது
ஜம்ஷெட்பூர்: ஜம்ஷெட்பூரில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல்லை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டம் ஜம்ஷெட்பூரில் உள்ள தட்கித்ஹிலில் இருந்து அகமது மசூத் அக்ரம் ஷேக் என்கிற மசூத் என்கிற மோனு மற்றும் ஜாகிர் நகரில் இருந்து நசிம் அக்தர் என்கிற ராஜு ஆகியோர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல்லை சேர்ந்தவர்கள்.
அவர்கள் இருவரும் ஜார்க்கண்ட் மாநில இளைஞர்களிடம் நைசாகப் பேசி அவர்களை அல் கொய்தா அமைப்பில் சேருமாறு ஊக்குவித்து வந்துள்ளனர். ஹரியானா மாநிலம் மேவத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜம்ஷெட்பூரைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதி அப்துல் சமி அளித்த தகவலின்பேரில் தான் மசூத்(35) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் மசூத் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டாக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான் கட்சியின் பேச்சை கேட்டு அல் கொய்தா அமைப்பில் சேர்ந்தேன். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து அந்த அமைப்பில் உள்ளேன். 2003ம் ஆண்டு ஜம்ஷெட்பூர் வந்த ரஹ்மானை சாக்சியில் உள்ள ஜும்மா மசூதியில் முதன்முதலாக சந்தித்தேன். அவர் தான் என்னை அல் கொய்தா அமைப்பில் சேர ஊக்குவித்தார்.
2011ம் ஆண்டு சவுதிக்கு சென்றுவிட்டு நாடு திரும்புகையில் சமியை பார்த்தேன். அவரை அல் கொய்தாவில் சேருமாறு நான் தான் கூறினேன். சமிக்கு பயிற்சி அளிக்க அவரை பாகிஸ்தான் அனுப்பி வைக்க உதவினேன் என்றார்.