அலாவுதீனின் அற்புத விளக்கு.. தேய்த்தால் பூதம் வரும்.. கண்கட்டி வித்தையால் ரூ31 லட்சம் ஏமாந்த டாக்டர்
மீரட்: அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முலாம் பூசிய விளக்கை ரூ 1.5 கோடிக்கு விலை பேசிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு மருத்துவர் புகார் அளித்துள்ளார். இதை கேட்ட போலீஸார் சிரிப்பதா அழுவதா என தெரியாமல் விழித்தனர். அதாவது அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முகாம் பூசிய விளக்கு ஒன்றை ரூ 1.5 கோடிக்கு விலை பேசி கும்பல் ஒன்று புகார் அளித்த மருத்துவரிடம் விற்பனை செய்துள்ளது.
அந்த புகாரில் இக்ராமுதீன், அனீஸ் என்ற இருவர் உடல்நலம் இல்லாத தங்களது தாய்க்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவரை அணுகியுள்ளனர். இதன்பின்னர் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்களின் வீட்டுக்கு சென்று மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
மருத்துவர்களிடம் அறிமுகம்
இந்த நிலையில் பாபா என்பவரை இருவரும் மருத்துவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது எங்களிடம் ரூ 1.5 கோடியில் அலாவுதீன் விளக்கு ஒன்று உள்ளது. அது செல்வவளம், உடல்நலம் மற்றும் நல்ல எதிர்காலம் ஆகியவற்றை வழங்கும்.
தவணை
உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.. என கிளப்பி விட்டுள்ளனர். இதன்பின்னர் அலாவுதீன் போல் உடையணிந்த ஒருவர் மருத்துவர் முன்பு தோன்றியுள்ளார். இவற்றை நம்பிய மருத்துவர் , அந்த விளக்கை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். அதற்காக முதல் தவணையாக ரூ 31 லட்சத்தை கொடுத்தார்.
போலீஸில் புகார்
பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் அந்த விளக்கை தேய்த்துள்ளார். அப்போது வெறும் தூசியே வந்தது. மீண்டும் மீண்டும் தேய்த்ததில் பூதத்திற்கு பதிலாக தூசியே வந்தது. இதனால் நாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் போலீஸில் புகார் செய்தார்.
பூசிய விளக்கு
இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர். தங்க முலாம் பூசிய விளக்கை பறிமுதல் செய்துள்ளனர். தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். இந்த இருவரும் நகரின் பல பகுதிகளுக்கு சென்று வீட்டில் இருப்பவர்களிடம் தந்திர வித்தைகள் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.