சுடப் போறேன்.. நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல்.. 2 உத்தரகாண்ட் வாலிபர்கள் கைது
நிர்மலா சீதாராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் அதிரடியாக உத்தரகாண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்திலுள்ள தார்சுலா நகரில் ராணுவம் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
வாட்ஸ்அப் தகவல்
இந்த மருத்துவ முகாமினை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். ஆனால் இந்நிகழ்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் வருவதை முன்கூட்டியே அறிந்த ஒருவர், நேற்று முன்தினம் தனது வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு தகவலை பதிவிட்டார்.
சுடப்போகிறேன்
அப்போது நேரம் இரவு 9.30. அந்த தகவலில், "‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்' என்று சொல்லி இருந்தார்.குரூப்பில் இந்த தகவலை அவர் பதிவிட்டதும், அதற்கு இன்னொருவர் வந்து வாட்ஸ்அப்பில் சர்ச்சையான பதிலை பதிவிட்டார்.
விரட்டி பிடித்த போலீசார்
இப்படி இருவரும் மாறி மாறி தகவல்களை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்த தகவல் உளவுத்துறையினருக்கு தெரிந்துவிட்டது. உடனடியாக இந்த இரண்டு பேர் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர். இரவோடு இரவாக விரட்டி பிடித்து ஒருவழியாக நேற்று காலையில் கண்டுபிடித்து விட்டார்கள்.
போதையில் இருந்தனர்
அவர்களிடம் உத்தரகாண்ட் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இரண்டு பேருமே மெசேஜ் அனுப்பிய ராத்திரி நேரத்தில் செம போதையில இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்களை கைது செய்த போலீசார், கொலை மிரட்டல் பிரிவு 506 மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தவிர அந்த வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர்.