ராக்கி கட்டிய இரண்டே நாளில் தங்கை கழுத்தை நெரித்து கொன்ற அண்ணன்
டெல்லி: ராக்கி கட்டிய இரண்டே நாட்களில் தங்கையின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியில் முகர்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி (28- பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவனை பிரிந்த சாக்ஷி, தனது 2 குழந்தைகளுடன் அண்ணன் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலையில் அப்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இக்கொலையை நேரில் பார்த்த அப்பெண்ணின் 10 வயது மகன், கொலை நடப்பதற்கு முன்னர் தனது தாயை அவரது அண்ணன் அதாவது தனது மாமா, கடுமையாக தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், இரவு முழுவதும் பிணத்தின் அருகே மாமா உறங்கியதாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
கொலையாளியின் மனைவி சில நாட்களுக்கு முன்னர்தான் சண்டை போட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் போலீசுக்கு தெரியப்படுதியுள்ளனர்.
அதற்குள் அங்கிருந்த தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடிக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் என்ன செய்வதென்று அறியாமல் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் என கூறிய போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். ராக்கி திருநாளையொட்டி கொலைக்கு 2 நாட்கள் முன்புதான் இருவரும் ராக்கி கட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.