நடிகை பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு 2 நாட்கள் போலீஸ் கஸ்டடி!
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திலீப்புக்கு ஜாமீன் வழங்கவும் அங்கமாலி நீதிமன்றம் மறுத்துள்ளது.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் நடிகர் திலீப் இன்று காலை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.
அங்கமாலி நீதிமன்றத்தில் நடிகர் திலீப்பை கேரள போலீசார் ஆஜர்படுத்தினர். நடிகர் திலீப்பை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் 3 நாட்கள் அனுமதி கோரினர்.
இதைத்தொடர்ந்து திலீப்பை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் திலீப்புக்கு ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது. விசாரணை ஆரம்பநிலையில் இருப்பதால் ஜாமீன் மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.