ஜம்மு காஷ்மீர்...மூச்சு வாங்கிய...4G நெட்வொர்க்...அதுவும் இங்கு மட்டும்தான்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 4G நெட்வொர்க் இணைப்பு நேற்று இரவு இரண்டு மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஓராண்டு முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த இணைப்பு இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் கதந்தர்பால், காஷ்மீரின் உதம்பூரின் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில், செல்போன்களுக்கு 4G நெட்வொர்க் இணைப்பு கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து இருந்தது. அந்த விளக்கத்தில், பரிசோதனை அடிப்படையில் இந்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் மொத்தம் 20 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் இணைப்பு கொடுப்பது குறித்து கமிட்டி ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்து இருந்தது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''கதந்தர்பால், உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 2G இன்டர்நெட் சேவையே தொடரும். இந்த உத்தரவு ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணி முதல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை அமலில் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.
போஸ்ட் பெய்டு சந்தாதாரர்களுக்கு மட்டும் இந்த ஹை ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். மற்றவர்களுக்கு பரிசோதனை ஆய்வுகள் மற்றும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 மாத குழந்தையை உதைத்து, கழுத்தை நெரித்து டார்ச்சர்.. சிசிடிவியில் சிக்கிய தாய்.. காரணம் என்ன?
கடந்தாண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. அங்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் வாபஸ் பெறப்பட்டது. மேலும், லடாக், ஜம்மு காஷ்மீர் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. ''எப்போதும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்காது. சில நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் ஜம்மு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார்.
சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறுவதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி செல்போன்களுக்கு 2G இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு முர்மு ஆளுநராக இருந்தார்.