சிகிச்சைக்காக வந்த பெண்ணை கங்கையில் மூழ்க வைத்த டாக்டர்கள்... கான்பூரில்!
கான்பூர்: விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த பெண்ணை கங்கை ஆற்றில் மூழ்கடித்த இரண்டு ஜூனியர் டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பெகுசாரையைச் சேர்ந்தவர் கிருஷ்ணா தேவி. இவர் சமீபத்தில் உத்திரப்பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது விபத்து ஒன்றில் சிக்கினார். தனிமையில் பயணம் செய்த கிருஷ்ணா தேவியை போலீசார் மீட்டு கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அங்கு பணியில் இருந்த விவேக் நய்யார் மற்றும் இப்திகார் அன்சாரி என்ற இரண்டு ஜூனியர் டாக்டர்கள், கிருஷ்ணா தேவியை ஆம்புலன்சில் அழைத்துச் சென்று கங்கை நதியில் மூழ்கடித்துள்ளனர்.
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட கிருஷ்ணா தேவியை மீண்டும் போலீசார் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது கிருஷ்ணாதேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு ஜூனியர் டாக்டர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த இரண்டு டாக்டர்களும் மூன்று மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தும் என கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக்கல்லூரியின் எலும்பியல் துறை தலைவர் ஏ.கே.குப்தா தெரிவித்துள்ளார்.