நைஜீரியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் விடுவிப்பு - வெளியுறவுத் துறை
டெல்லி: நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட 2 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மங்கிப்புடி சாய் ஸ்ரீனிவாஸ், கர்நாடகத்தைச் சேர்ந்த அனீஷ் சர்மா ஆகிய இருவரும், போகோ நகரில் கடந்த மாதம் 29 ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் சென்ற கார் போக்குவரத்து சிக்னல் ஒன்றில் நின்றிருந்தபொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய வெளியுறவுத் துறை இந்தியா ஈடுபட்டது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறுகையில், போகோ ஹரம் தீவிரவாத அமைப்பின் செயல் எதுவும் இல்லை என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
உள்ளூரை சேர்ந்த சில குற்றவாளிகளே இதனை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது என கூறினார். இந்நிலையில், கடத்தப்பட்ட 2 இந்தியர்களும் சனிக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர்.
இருவரும், தத்தமது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஷர்மாவின் மனைவி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், இருவரையும் விடுவிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை உடனுக்குடன் தெரிவித்து வந்ததற்கும் பாராட்டுகளைக் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறினார்.