ஆசியாவின் நோபல் “ராமன் மகசேசே” விருதுகள் அறிவிப்பு - 2 இந்தியர்கள் உட்பட ஐவர் தேர்வு
டெல்லி: ஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படும் ராமன் மகசேசே விருதுகளுக்கு இரண்டு இந்தியர்கள் உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த சேவைக்கான ராமன் மகசேசே விருதுகள் வருடம் தோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு எய்ம்ஸ் முன்னாள் முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதிக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.
கூஞ்ச் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அன்ஷு குப்தாவற்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. மேலும், லாவோசின் கொம்மலி, மியான்மரின் கியான் தூ, பிலிப்பைன்சின் பெர்ணாண்டோ ஆகியோரும் இவ்விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமன் மகசேசே விருது ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு முதல் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை எடுத்துக்காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இவ்விருது ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.