நேருக்கு நேர் பறந்த கோவை-ஹைதராபாத், பெங்களூர்-கொச்சி விமானங்கள்.. 200 அடி கேப்பில் தப்பிய பயணிகள்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு இண்டிகோ பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதிக்கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். விபத்து தவிர்க்கப்பட்டதால் மொத்தம் 330 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கோவை-ஹைதராபாத் விமானம்
கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு 162 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானமும், பெங்களூரில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் புறப்பட்ட விமானமும்தான் விபத்துக்குள்ளாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் விமான பயணிகளிடம் பீதியை உருவாக்கியுள்ளது.
அலாரம் அடித்தது
பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகையில், இவ்விரு விமானங்கள் நடுவேயான செங்குத்து இடைவெளி என்பது, வெறும் 200 அடிகளாக மட்டுமே இருந்ததாம். விமான மோதல் தடுப்பு சிஸ்டம் அலாரம் (TCAS) உடனடியாக ஒலிக்கத் தொடங்கியதால் பைலட்டுகள் சுதாரித்துக்கொண்டு மோதலை தவிர்த்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விசாரணை துவக்கம்
இந்த சம்பவம் நேற்று முன்தினம், அதாவது ஜூலை 10ம் தேதி நடந்ததாகவும், இதுதொடர்பாக, விமான விபத்து புலனாய்வு வாரியம் தனது விசாரணையை துவங்கியுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு, விமான ஒழுங்குமுறை அமைப்பிடம் தகவல் தெரிவித்துவிட்டோம் என்று இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ ஆஃபர்கள்
இண்டிகோ விமானம் குறைந்த விலை டிக்கெட்டுகளை வழங்கி பயணிகளிடம் பிரபலமாகியுள்ளது. ஜூலை 25, 2018 முதல் மார்ச் 30, 2019 வரைக்கு இடைப்பட்ட காலத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தால், சர்வதேச விமான தடங்கள் உள்பட 12 லட்சம் பயண சீட்டு ரூ.1,212 என்ற சிறப்பு பயண சலுகையில் கிடைக்குமாம்.