ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு.. எமிரேட்சில் இருந்து நாடு கடத்தப்பட்ட 2 கேரள வாலிபர்கள் கைது!
திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் இரு கேரள வாலிபர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தியுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். தாயகம் திரும்பிய கேரள வாலிபர்கள் இருவரையும் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக மலையாளிகளும், தமிழர்களும் அதிகம் பணியாற்றுகிறார்கள். அந்த நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம், மூளைச் சலவை செய்யப்படும் அந்த நாட்டு இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
இதில், இந்திய இளைஞர்கள் சுமார் 11 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தியா, எமிரேட்சிடம் தெரிவித்திருந்தது. எமிரேட்ஸ் உளவு பிரிவும் இதை உறுதி செய்ததை தொடர்ந்து அதில் சிலரிடம் எமிரேட்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு கேரள வாலிபர்களை சமீபத்தில் எமிரேட்ஸ் நாடு கடத்தியது. இதேபோல தற்போது மேலும் 2 வாலிபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது எமிரேட்ஸ்.
அவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கியதும், இங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் அவர்களுக்குள்ள தொடர்பு பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
இவர்கள், சமூக வலைத்தளங்களில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.