ஜம்மு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... 2 வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீரின் சஞ்வான் பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரின் சஞ்வான் பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்முவின் புறநகர் பகுதியான சஞ்வான் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமிற்குள் வீரர்களுக்கான தங்கும் இடம் பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இன்று அதிகாலை 4.45 மணியளவில் ராணுவ மையத்திற்குள் தீவிரவாதிகள் சுற்றித்திரிவதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் கண்டனர். திடீரென வீரர்களின் குடியிருப்பை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள், குழந்தைகள் உள்பட 6 பேர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுட்டவர்கள் ஜெய்ஷ்-ஈ-முகமது தீவிரவாத அமைப்பு என்று தெரியவந்துள்ளது. தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் இன்று ரணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய விமானப்படையினர் உஷார்படுத்தப்பட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். உதம்பூரில் இருந்து ஜம்முவிற்கு விரைந்து வந்த பாரா கமாண்டோக்கள் தீவிரவாதிகளை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் டிஜிபி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சஞ்வான் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.