ஜம்மு காஷ்மீரின் யூரி எல்லையில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது.. ராணுவம் அதிரடி !
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் யூரி எல்லைப் பகுதியில் ஜெய்ஸ் இ முகமது அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாத வழிகாட்டிகளை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு -காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே தாக்குதல் நடந்த யூரி பகுதியில் உள்ள எல்லை அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 2 பேரை ராணுவம் கைது செய்துள்ளது. அவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத வழிகாட்டிகளாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.