உணவு தரச் சென்ற ஊழியரைக் கடித்துக் குதறிய சிங்கங்கள்- பெங்களூரு உயிரியல் பூங்காவில் பயங்கரம்!
பெங்களூரு: பெங்களூரு அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் உணவு கொடுக்க சென்ற ஊழியரை சிங்கங்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டாவில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு உணவளித்து, பராமரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் கிருஷ்ணா என்ற கிருஷ்ணப்பா (40).
வழக்கம் போல, நேற்று காலை பணிக்குச் சென்ற கிருஷ்ணா, 4 வயதான நகுல் என்ற ஆண் சிங்கத்திற்கு மாமிச உணவுகளை வழங்கியுள்ளார். அப்போது திடீரென கூண்டை விட்டு வெளியே வந்த இரண்டு சிங்கங்கள், கிருஷ்ணா மீது பாய்ந்து கடித்துள்ளது.
இத்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணா வலியால் அலறினார். கிருஷ்ணாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஊழியர்கள், உருட்டுக் கட்டையால் சிங்கங்களை அடித்து விரட்டினர். சிங்கங்கள் தாக்கியதில் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணாவை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். காயமடைந்த கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், "கிருஷ்ணாவை சிங்கங்கள் கடித்து குதறியதில், அவரது உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறி உள்ளது. மேலும் அவரது கழுத்தில் பலமாக சிங்கங்கள் கடித்திருப்பதால், பின்பக்க தலையிலும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மூளையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை குணப்படுத்த சிகிச்சை அளித்து வருகிறோம். அதுதவிர கிருஷ்ணாவின் மார்பு, வயிற்று பகுதியிலும் உண்டான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிருஷ்ணாவின் உடல் நிலை குறித்து எதுவும் சொல்ல இயலாது. இன்னும் 48 நேரத்திற்கு பின்பு தான், அவரது உடல் நிலை பற்றி சொல்ல முடியும். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது," என்றார்.
ஊழியர் ஒருவரை சிங்கங்கள் தாக்கிய இச்சம்பவம் தொடர்பாக பூங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்தாண்டு டெல்லி உயிரியல் பூங்காவில் பார்வையாளராகச் சென்ற மாணவர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. இந்நிலையில், பெங்களூரு உயிரியல் ஊழியர் ஒருவரை சிங்கங்கள் கடித்துக் குதறியிருப்பது உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் குற்றச்சாட்டு:
இதற்கிடையில், பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்று ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.