ஜம்மு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. தாவி ஆற்றில் சிக்கிய இருவரை துணிச்சலாக மீட்ட விமான படை
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்கச் சென்ற போது ஆற்றில் சிக்கிய இருவரை விமான படையினர் துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் காண்போரை பாராட்ட வைக்கிறது.
ஜம்முவின் குறுக்கே தாவி என்ற ஆறு பாய்கிறது. இது மிகவும் புனிதமான ஆறாக கருதப்படுகிறது. இங்கு அனைத்து நதிகளும் சங்கமிப்பதால் அது புனிதத்தன்மை வாய்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆறு கைலாஷ் குந்த் பனியாற்றிலிருந்து உருவாகிறது. இது ஜம்மு, உத்தம்பூர், தோடா ஆகிய இடங்களில் பாய்கிறது. இந்த நிலையில் கைலாஷ் குந்த் பனியாறு பின்வாங்கி வருவதால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தாவி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்து வந்தது.
தண்ணீர்
இந்த நிலையில் வடஇந்தியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தாவி ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்தது. இந்த தண்ணீரில் மீன் பிடிக்க 4 பேர் சென்றனர்.
பாலத்தின் சுவர்
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட 4 பேரில் இருவர் அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்துக்கான சுவற்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டனர்.
ஹெலிகாப்டருடன்
மற்ற இருவர் எப்படியோ நீந்தி கரை சேர்ந்தனர். இந்த நிலையில் தண்ணீர் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பாலத்தின் மேல் இருந்த இருவரால் வெளியேற முடியவில்லை. இதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமான படை வீரர்கள் கண்டனர்.
|
துணிச்சல்
அப்போது பால சுவற்றுக்கு நேராக நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து விமானப் படை வீரர் ஒருவர் கயிற்றை கட்டிக் கொண்டு இறங்கினார். அவர் அந்த இருவர் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று அவர்களது இடுப்பில் கயிற்றை கட்டி விட்டு அனுப்பினார். பின்னர் தானும் கயிற்றின் மூலம் ஹெலிகாப்டரை வந்தடைந்தார். தங்களது உயிரையும் துச்சமாக கருதி இரு மீனவர்களின் உயிரை துணிச்சலாக காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிகின்றன. தண்ணீரின் அளவு வேகமாக அதிகரித்து வருவதால் விமான படை வந்ததில் தாமதம் ஏற்பட்டிருந்தால் இரு உயிர்கள் பறி போயிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.