போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களை மோசமாக தாக்கும் கொரோனா.. இன்று 2 பலி, இதுவரை 7 பேர் பலி
போபால்: போபால் விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இப்படி போபால் விஷவாயு தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது இதுவரை அங்கு கொரோனாவால் 1485 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 1984ம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விஷவாயு விபத்தில் 3,787பேர் உயிரிழந்தனர். 16,000 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சரியாக 36 ஆண்டுகளாக விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடல் நிலை வேகமாக மோசமடைந்து மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 17ம் தேதி 70வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதேபோல் 60 வயதாகும் நபர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இறந்து போன இருவருக்கும் அவர்கள் இறந்த பின்னரே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் போபால் விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 7 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தகவல் மற்றும் நடவடிக்கை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ரச்னா திங்ரா, போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வருகிறார். இவர் தான் மேற்கண்ட தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக ரச்னா மேலும் கூறுகையில், 1984 நச்சு வாயு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், மேலும் அவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை என்று கூறினார். இந்த மாத தொடக்கத்தில், கொரோனா வைரஸ் நோயால் எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்ட 5 பேர் இறந்தனர்.