பெங்களூரில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த நக்சலைட் தம்பதி கைது! ஆந்திர போலீஸ் சுற்றி வளைத்தது
பெங்களூர்: பெங்களூர் நகரில் பதுங்கியிருந்த நக்சலைட் தம்பதிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணா மற்றும் பாரதி. இவ்விருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து தப்பியோடி வந்து பெங்களூர் பீன்யா பகுதியிலுள்ள பகலுகுண்டே, ஆனந்த் லேஅவுட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் ரமணய்யாவிடம் தாங்கள் கணவன், மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதில் கிருஷ்ணா கட்டிட கூலி வேலைகளுக்கும், பாரதி, டெய்லர் வேலையும் செய்து வாழ்க்கையை நகர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் சித்தூர் போலீஸ் சிறப்பு படை பிரிவு, நேற்றிரவு பெங்களூரில் கிருஷ்ணா மற்றும் பாரதி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தது. இவர்கள் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இருவர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.