மருத்துவமனை "வார்மர்" சாதனத்தில் வைக்கப்பட்ட 2 சிசுக்கள் கருகி இறந்த கொடூரம்
கொல்கத்தா: மருத்துவர்களின் அஜாக்கிரதையால், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு புதிதாக பிறந்த குழந்தைகள் வார்மர் சாதனத்தில் வைக்கப்பட்டு, சூடு அதிகமாகி, அதைத் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது. உயிரிழந்த இரண்டு குழந்தைகள் பிறந்து ஐந்து மற்றும் நான்கு நாட்கள் மட்டுமே ஆனவை.
உயிரிழந்த குழந்தை ஒன்றின் தாயான சோனம் கூறுகையில், ‘சம்பவம் நடந்த அன்று இரவு குழந்தைக்கு பாலூட்டுவதற்காக சென்றிருந்தேன். அப்போது வார்மரில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையின் உடல் நெருப்பாகத் தகித்தது. உடனடியாக இது தொடர்பாக அங்கிருந்த நர்சிடம் நான் தகவல் தெரிவித்தேன். விரைந்து வந்து குழந்தையை சோதித்த அவர், என்னை அங்கிருந்து வெளியேறும்படியும், மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறினார்.
மறுநாள் காலை மீண்டும் நான் சென்று பார்த்தபோது, குழந்தை அசைவற்று விரைத்த நிலையில் இருந்தது. குழந்தையின் அந்த நிலை குறித்து அங்கிருந்த யாரும் உரிய விளக்கம் தரவில்லை. பின்னர் என்னை உள்ளே சென்று குழந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
பின்னர் மதியம் 2 மணியளவில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அஜாக்கிரதையே இதற்குக் காரணம். குழந்தையை என் பராமரிப்பில் வைத்திருந்தால்கூட காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சிகிச்சை என்ற பெயரில் அஜாக்கிரதையால் அதனைக் கொன்று விட்டனர்' என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த குழந்தையொன்றின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை வட்டாரத் தகவல்களின்படி, ஒரே நேரத்தில் வார்மரில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள்ளன. ஒரு வார்மரில் ஒரு நேரத்தில் ஒரு குழந்தையை மட்டுமே வைத்து பராமரிக்க வேண்டும். காரணம் குழந்தைகளின் உடல் சூடானது வேறுபடும் என்பதால். ஆனால், மருத்துவமனை ஊழியர்களோ ஒரே நேரத்தில் ஒரு வார்மரில் மூன்று குழந்தைகளை வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். அதோடு வார்மரின் வெப்ப அளவும் கூட்டி வைக்கப்பட்டுள்ளது..
இந்த மாதிரி சமயங்களில் மருத்துவர்கள் அல்லது ஊழியர்கள் யாராவது அருகிலேயே இருந்து வெப்பநிலையைக் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டது இரண்டு சிசுக்களை உயிரோடு கருக்கி விட்டது.