உ.பி.யில் பயங்கரம்: 2 போலீசார் சுட்டுக் கொலை- மர்ம நபர்கள் அட்டகாசம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பணியில் இருந்த 2 போலீசார் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜங் பகதூர் சிங்கின் மகன் மகேந்திர பிரதாப் சிங்(41) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் கடந்த 10 நாட்களில் 3 பாஜக தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் மேலும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. பிரோசாபாத் மாவட்டத்தில் பணியில் இருந்த போலீசார் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் போலீசார் கொலை செய்யப்படுவது இது ஒன்றும் முதன் முறை அன்று. முன்னதாக கடந்த ஆண்டு பிரதாப்கர் மாவட்டத்தில் துணை எஸ்.பி. ஜியா உல் ஹக் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.