நிக்கோபார் தீவுகளில் 24 மணிநேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம்
போர்ட் பிளேர்: நிக்கோபார் தீவுகள் அருகே 24 மணிநேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிக்கோபார் தீவுகள் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியிருந்தது. 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 43 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த 7 நாட்களில் 6 முறை நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் நேற்று இரவு ஏற்பட்டது தான் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பன்டா அசேயில் இன்று காலை 5.4 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தமானிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.