பெண்களுக்கு ஆண்டுக்கு 2 சேலைகள் தரப்படும்… ஜன சேனா கட்சி தேர்தல் அறிக்கை
Recommended Video
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டு தோறும் இலவசமாக 2 சேலைகள் சீதனமாக வழங்கப்படும் என நடிகர் பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 11ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கே தெலுங்கு தேசம் கட்சி - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டசபை தேர்தலில் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜீவாக்கா, மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தேர்தல் அறிக்கை
ஜன சேனா, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. பவன் கல்யான் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி அறிவிப்புகள் குவிந்துகிடக்கின்றன. தமிழகத்தில் வழங்கப்படுவது போல் அடுக்கடுக்கான இலவசத் திட்டங்களை பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
ஓய்வூதியம்
அதன்படி, பெண்களுக்கு சகோதர்களின் சீதனம் போல் ஆண்டுக்கு இரண்டு சேலைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் 58 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு சலுகை
முதுநிலை படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச பஸ் ரயில் பாஸ் வழங்கப்படும் இளநிலைப் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும், முதல் ஆண்டுக்கான தேர்வு கட்டணத்தை அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களையும், இளம் வாக்காளர்களையும் குறிவைத்து ஜன சேனா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது .
நெருக்கடி
ஏற்கனவே, பாஜக எதிர்பால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படும் சூழலில், தெலுங்கு தேசம் கட்சிக்கு பவன் கல்யாண் கட்சியின் தேர்தல் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் கடந்த 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது அவர் இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிவிப்புகள்
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்ணின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். ஏழைகள் அனைவருக்கும் இலசவமாக வீடு கட்டித்தரும் திட்டம் அமல்படுத்தப்படும். பெண் ஊழியர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர மோட்டார் பைக் வழங்கப்படும் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை பெண் வாக்காளர்களை குறிவைத்து தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.. சந்திரபாபு நாயுடு கவர்ச்சி வாக்குறுதி