சென்னை சென்டிரலில் குண்டு வைத்த 2 சிமி தீவிரவாதிகள் தெலுங்கானா என்கவுண்டரில் பலி!
ஹைதராபாத்: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிமி அமைப்பினருக்குத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை தெலுங்கானா போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், சூரிப்பேட்டையில் சனிக்கிழமையன்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகம்மது அசாதுதீன், முகம்மது அஸ்லம் ஆகிய இருவர் வந்த வாகனத்தைப் போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது இருவரும் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீஸார் உயிரிழந்தனர்.
அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்துத் தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் போலீஸார் தேடிப் பிடித்தனர். அப்போது நடந்த மோதலில் இந்த இருவரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா சிறையிலிருந்து தப்பி வந்த சிமி தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்தது. இதையடுத்து ம.பி. போலீஸாருக்குத் தகவல் அனுப்பப்பட்டது. ம.பியிலிருந்து விரைந்து வந்த போலீஸ் படை இருவரது உடல்களையும் பார்வையிட்டு அவர்கள் கண்ட்வா சிறையிலிருந்து தப்பியவர்கள் என்பதை உறுதி செய்தது.
கடந்த 2013ம் ஆண்டு இவர்கள் உள்பட மொத்தம் 5 சிமி அமைப்பினர் கண்ட்வா சிறையிலிருந்து தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்பு இருந்தது. முக்கியமாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே 1ம் தேதி நடந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் இந்த இருவருக்கும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி என்ற இளம் பெண் உயிரிழந்தார்.
தெலுங்கானா என்கவுண்டர் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,
மத்திய பிரதேச மாநிலத்தில் சிமி தீவிரவாத இயக்கத்தில் அபுபைசல் என்ற தீவிரவாதி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவன் ஆவான். இவனது கட்டுப்பாட்டின் கீழ் இளைஞர்கள் பலர் தீவிரவாத எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், சிலர் மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முகமது அஜாதுதீன், முகமது அஸ்லாம், அஜ்மத்கான், ஜாகீர் உசேன், மெகபூப் ஆகிய 5 பேர், கடந்த 2013ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பினர். இவர்கள் ஜெயிலில் இருந்து தப்பிச் செல்வதற்கு அபுபைசல் உதவிகளை செய்துள்ளான்.
சிறையில் இருந்து தப்பிச்சென்ற 5 தீவிரவாதிகள் மீதும், வங்கிகளில் கொள்ளை அடித்தல், வழிப்பறி, போலீஸ்காரர்களை கொலை செய்தது உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. பிரமோத் திவாரி கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருந்தது.
இதனால் 5 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, மத்திய பிரதேச போலீசார் நாடு முழுவதும் தேடி வந்தனர். இந்நிலையில் தான் தெலுங்கானாவில் பதுங்கி இருந்த சிமி தீவிரவாதிகளான முகமது அஜாதுதீன், முகமது அஸ்லம் ஆகியோர் கொல்லப்பட்டுள்னர் என்றனர்.