காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 2 பேர் வீரமரணம்
ஜம்மு: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலைியில் நேற்று காலை ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நாய்க் திபாக் மைதி என்ற மற்றொரு ராணுவ வீரர் ஒருவரும் உயரிழந்தனர்.
இதையடுத்து எல்லப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நிறுத்தப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்திய ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.