காலைக் கடன் கழித்த பெண்களை போட்டோ எடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டீம்.. வெடித்த சர்ச்சை!
மும்பை: ஸ்வச் பாரத் திட்டத்தின் மீதான வெறி, வேறு லெவலுக்கு போய்விட்டது மகாராஷ்டிராவில் என்பதை நிரூபிக்கிறது, சமீபத்தில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம்.
நல்லது செய்கிறோம் என நினைத்து, நாடே தூற்றும் காரியத்தை செய்துவிட்டனர் அங்குள்ள அதிகாரிகள். ஸ்வச் பாரத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான முயற்சிகளை எடுக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பொது இடத்தில் மலம் கழிக்கும், ஆண்களின், லுங்கிகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பெண்களுக்கு வரவேற்பு
இப்போது மகாராஷ்டிராவில், பெண்களுக்கு ஒரு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. ஏழை, கூலித்தொழிலாளி பெண்கள் இருவர் திறந்த வெளியில் மலம் கழித்துவிட்டு வந்தபோது அவர்களை வழிமறித்த அதிகாரிகள், மாலையிட்டு 'வரவேற்பு' அளித்ததோடு, போட்டோவும் எடுத்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காலை கடன் முடித்துவிட்டு வந்தவர்களை வீட்டுக்கு கூட செல்லவிடாமல் நடுவிலேயே வழி மறித்து, ஐஏஎஸ் அதிகாரியயான ராஜேந்திர பாருத் தலைமையிலான அதிகாரிகள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனர்.
சுய உதவி குழு மீது பழி
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜேந்திர பாருத், தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என தெரிவித்துள்ளார். உள்ளூர் சுய உதவி குழுதான், இதுபோல அந்த பெண்களை அவமானப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
சட்டத்தின்கீழ் தண்டிக்கலாம்
சோலாப்பூர் தொகுதி எம்எல்ஏ பிரணிதி ஷிண்டே இச்சம்பவத்தால் கோபமடைந்துள்ளார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். இதுபோன்ற படத்தை எடுத்ததற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் அதிகாரியை தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.