வயிற்றில் கரு.. அரியவகை பிரச்சினையுடன் பிறந்த ஆண் குழந்தை... அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
பிறந்து 20 நாளே ஆன ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அகற்றம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டது.
அகமதாபாத்தை அடுத்த சனந்த் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதியருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் வயிறு பிறந்தது முதலே வீக்கத்துடன் காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த பெற்றோர் மருத்துவரை அணுகி பரிசோதித்தனர். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அந்த குழந்தையின் வயிற்றில் முழுமையாக வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். இந்த அரிய வகை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதென மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த மாத இறுதியில் அந்த ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத சிசு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வெளியே எடுத்து பார்த்தபோது, வளர்ச்சி அடையாத கைகள் மற்றும் முதுகுதண்டு பகுதியுடன் அந்த சிசு இருந்தது. ஒரு வாரக்கால தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த ஆண் குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது.
மருத்துவத்துறையில் இது மிகவும் அரிதான ஒரு பிரச்சினை. 5 லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. மருத்துவ வரலாற்றில் இதுவரை சுமார் 200 பேருக்கு தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தாயின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உருவாகும் போது, ஒரு குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.