20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: நீதிமன்றத்தை நம்பினாலும் இடைத் தேர்தலுக்கும் தயாராகும் ஆம் ஆத்மி
20 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் இடைத் தேர்தலுக்கு தயாராகிறது ஆம் ஆத்மி.
டெல்லி: இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததாக கூறி 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தை நாட டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில் இடைத் தேர்தலுக்கும் முழு வீச்சில் ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.
அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற உடன் 20 எம்.எல்.ஏக்களை, பார்லிமென்டரி செக்ரெட்டரி எனப்படும் அமைச்சர்களின் செயலாளர்களாக நியமித்தார். ஆனால் இதற்கு பாஜக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.
ஜனாதிபதி அதிரடி உத்தரவு
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், 20 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் 20 எம்.எல்.ஏக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
பிற மாநிலங்களிலும் இரட்டை ஆதாய பதவி
ஆனால் இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றத்தை நாடியுள்ளது ஆம் ஆத்மி அரசு. பாஜக. காங்கிரஸ் ஆளும் ஹரியானா, பஞ்சாப், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதேபோல் எம்.எல்.ஏக்களை அமைச்சர்களின் செயலாளர்களாக நியமிக்கும் நடைமுறை உள்ளது. இமாச்சல், மேற்கு வங்கத்தில் இந்த அமைச்சகளின் செயலாளர்கள் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றங்கள் ரத்து செய்த போது எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.
நீதியின் மீது நம்பிக்கை
இதனால் தங்களுக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறது ஆம் ஆத்மி. பாஜக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இதேபோல் எம்.எல்.ஏக்கள் இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அம்மாநில அரசுகள் கவிழும் அல்லது மெஜாரிட்டியை இழக்க நேரிடும்.
இடைத்தேர்தலுக்கும் ரெடி
ஆனால் 20 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும் கேஜ்ரிவால் அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து இல்லை. ஆகையால் நீதிமன்றத்தின் தீர்ப்பை மிகவும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது கேஜ்ரிவால் அரசு. அப்படியும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வராத நிலையில் 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை எதிர்கொண்டு மக்கள் மன்றத்தில் இப்பிரச்சனையை முன்வைப்பதற்கான வியூகத்திலும் ஆம் ஆத்மி தீவிரமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.