ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 200 இந்திய மாணவர்கள், ஐசியுவில் 2 பேர்
டெல்லி: அமெரிக்காவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹூஸ்டனில் 200 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஹார்வே புயலால் ஹூஸ்டனில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 200 இந்திய மாணவர்கள் கழுத்தளவு நீரில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சிக்கித் தவிப்பவர்களுக்கு உணவு அளிக்க முயற்சி செய்தோம். ஆனால் மீட்பு பணிக்கு படகுகள் தேவைப்படுவதால் அமெரிக்க கடலோர காவல்படை எங்களை அனுமதிக்கவில்லை.
இந்திய மாணவர்கள் ஷாலினி மற்றும் நிகில் பாட்டியா ஆகியோர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுஷ்மா ட்விட்டரில் மேலும் தெரிவித்துள்ளார்.