சல்மான்கான் விடுதலையை எதிர்த்து கார் விபத்தில் பலியானவரின் மகனும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
மும்பை: கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து இறந்து போனவரின் மகனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002 ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டியதில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது.
இதில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.
13 ஆண்டுகள்
13 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் சல்மான் கானுக்கு ஆதரவாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நாடு முழுவதும் சர்ச்சையுமானது.
மகாராஷ்டிரா அரசு அப்பீல்
இவ்வழக்கில் சல்மான்கான் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
குடும்பமும் மேல்முறையீடு
இந்நிலையில் சல்மான்கான் விடுதலை செய்ததை எதிர்த்து இறந்து போன ஷைக் நூருல்லா ஷாபிக்கின் மகன் பைரோஸ் சேக் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் வரும் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.