2002 குஜராத் வன்முறை: டீஸ்டா செதல்வாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து போலீஸ் பாய்ச்சல்- மாஜி டிஜிபி கைது!
அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து பிரதமர் மோடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் இவ்வழக்குக்கு ஆதரவாக இருந்த முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஶ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் கலவரம்... பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது
குஜராத் வன்முறை
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் உலகை உலுக்கிய மிக மோசமான மதவன்முறைகள் நிகழ்ந்தன. இம்மத மோதல்களில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் இப்போதைய பிரதமர் மோடி.
பிரதமர் மோடி விடுவிப்பு
2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. பிரதமர் மோடியை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். 2002 குஜராத் வன்முறைகளின் போது எரித்துக் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாஃப்ரியின் மனைவிதான் ஜாகியா ஜாஃப்ரி.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், சிவபெருமான் விஷத்தை அருந்தியது போல குஜராத் வன்முறைகள் தொடர்பான பொய்களை பிரதமர் மோடி தாங்கிக் கொண்டார்; காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை போல சிறப்பு விசாரணை குழு முன்பான விசாரணையின் போது பிரதமர் மோடி சத்தியாகிரக நாடகம் நடத்தவில்லை. விசாரணையை எதிர்கொண்டோம். இப்போது பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களை காங்கிரசார் கொன்று குவித்தனர். அதில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என கேள்வி எழுப்பினார் அமித்ஷா.
அதிரடி கைதுகள்
இந்தப் பேட்டியைத் தொடர்ந்து, 2002 குஜராத் வன்முறைகள் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அவதூறு வழக்குகள் தொடர்ந்ததாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.