அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கு.. உடந்தையாக இருந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
அலகாபாத்: 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம்.
அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி ராம ஜென்ம பூமியிலுள்ள, பாபர் மசூதி வளாகத்திற்குள் தீவிரவாதிகள் நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசினர், பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே வந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறிச் சென்றனர்.
அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், ஏற்கனவே பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். எனவே, தீவிரவாதிகளை மேலும், முன்னேற விடாமல், பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் சுமார் 1 மணி நேரத்திற்கு நீடித்தது.
பாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைகோர்ப்பு
இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், 5 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 7 சிஆர்பிஎப் படை வீரர்கள் காயமுற்றனர். இதுகுறித்து விசாரணையின்போது, தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இத்தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அலகாபாத்திலுள்ள/பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 63 பேர் சாட்சிகளாக வாக்குமூலம் பதிவு செய்தனர்.
14 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி, தினேஷ் சந்திரா இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளான, ஆஷிக் இக்பால் என்ற பாரூக், ஷகீல் அகமது, இர்பான், மற்றும் முகமது நசீம் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முகமது ஆசிஸ் என்பவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளிகள் நால்வரும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு தலா 2.4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.