மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதி யாசின் பத்கல் கைது!
மும்பையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 21 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 141 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பத்கல் என்ற ஊரை சேர்ந்த தீவிரவாதி யாசின் பத்கல் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கலுடன் அவருடைய கூட்டாளிஆசாத்துல்லா அக்தரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் 2011 ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தங்களது வசம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுவை ஏற்றடெல்லி நீதிமன்றம், தீவிரவாதி யாசின் பத்கல் மற்றும் அவரது கூட்டாளி ஆசாத்துல்லா அக்தர் ஆகியோரை ஒப்படைக்க உத்தரவிட்டது.
அதன்படி புதன்கிழமை அவர்கள் இருவரும் மராட்டிய தீவிரவாத தடுப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மும்பை கொண்டு வரப்படுகிறார்கள். இன்று அவர்கள் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.