மோடி 'சுனாமி'.. பாஜக மாபெரும் வெற்றி- மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வீசிய மோடி சுனாமி பேரலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் தொகுதிகளைப் பெற்று அரியணை ஏற்கிறது. நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார்.
நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
283 இடங்களைக் கைப்பற்றிய பாஜக
பாரதிய ஜனதா கட்சி மட்டும் 283 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த இடத்தில் மாநிலக் கட்சிகள் 147 இடங்களை பிடித்தன. காங்கிரஸ் கட்சியோ வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்றியது.
தனிப்பெரும்பான்மை
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக வென்றுள்ளதால் அக்கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
மோடி அபார வெற்றி
பாஜக முன்னிறுத்திய நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கிறார். அவர் போட்டியிட்ட குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலுமே அபார வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தில் இருந்து 2வது பிரதமர்
குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் 1977ஆம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். தற்போது குஜராத்தை சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார்.
பாஜக கொண்டாடம்
பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வென்றதை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடித் தீர்த்தனர்.
வதோதராவில் மோடி
மோடி தாம் போட்டியிட்ட வதோதரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய மோடி, வதோதரா சகோதர்கள் முன்புதான் முதன்முதலில் உரையாற்ற விரும்பினேன். .உங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன். வதோதராவில் 50 நிமிடம் தான் என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. ஆனால் எனக்கு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அளித்துள்ளீர்கள். ஜனநாய நடைமுறையை புரிந்து கொண்டதால் இந்த வெற்றியை அளித்துள்ளீர்கள். குஜராத்தில் 60% மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். நான் ஏற்கனவே கூறிய படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி தந்துள்ளனர் என்றார்.
21-ந் தேதி பொறுப்பேற்பு
வரும் 21-ந் தேதி நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். நரேந்திர மோடிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.