காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும்தான் தேர்தலில் போட்டி..: ஜெய்ராம் ரமேஷ்
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும்தான் போட்டி என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்தவிடாமல் பாரதிய ஜனதா கட்சியினர் முடக்கியதே இது காலதாமதமாக அமல்படுத்தப்படுவதற்கு காரணம் ஆகும்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக மத கலவர தடுப்பு சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் நேரடி மோதல் இல்லை. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், ஹிமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் நேரடி போட்டி உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் மாநில கட்சிகள் தான் உள்ளன.
அந்த மாநிலங்கள் அனைத்திலும் பாரதிய ஜனதா இல்லை. எனவே தேசிய அளவில் அனைத்து கட்சிகளுடனும் மோதும் ஒரே கட்சி காங்கிரஸ் தான்.
கடந்த 15 மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பங்களை பாரதிய ஜனதா நிறைவேற்றி வருகிறது. இதனால் 2014 தேர்தலில் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே போட்டி இல்லை. காங்கிரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தான் போட்டி உள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.