ஆபீஸ் போறவங்களுக்கு லீவுகளை அள்ளித்தரப்போகும் 2015
டெல்லி: இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டை கொண்டாட பலருக்கும் பல காரணங்கள். ஆனால் வேலைக்கு போவோருக்கு ஒரே காரணம்தான். அது என்னவென்றால், 2015ல் ஏகப்பட்ட விடுமுறைகள் வீக் என்ட்டை ஒட்டியே வருகிறதாம். இதனால் ஒரு நாள் லீவு போட்டாலும் 4 நாள், 5 நாள் என விடுமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டிகை விடுமுறை தினம் வருவது வருமாண்டில் மிக சொற்பமே. எனவே பண்டிகை தேதி சன்டேயில் வந்தால் டேக் இட் ஈசி என்று பாலிசி எடுக்கவும் அவசியம் கிடையாது. தொடர்ந்து இரு நாட்கள் லீவு கேரண்டி.
மகாசிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு/அம்பேத்கர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, பக்ரீத், தசரா ஆகிய பண்டிகைகள், செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் வருகின்றன. எனவே செவ்வாய்க்கிழமை பண்டிகைக்கு திங்கள் மட்டும் விடுப்பு எடுத்தால் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தானாக விடுமுறை கிடைத்துவிடும். அதேபோலத்தான், வியாழக்கிழமை பண்டிகை வந்தால், வெள்ளியன்று மட்டும் விடுப்பு எடுத்தால் போதும். நான்கு நாட்கள் லீவு கன்பார்ம். 2015ல் இதுபோல ஆறு நீண்ட வீக் என்டுகள் வர உள்ளன.
2015ல் தீபாவளி இரு வீக் என்டுகளுக்கு நடுவில் வர உள்ளது. எனவே தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த விடுமுறை நாட்களை திட்டமிட்டு சுற்றுலா ஏஜென்சிகளும் இப்போதே திட்டமிட ஆரம்பித்துள்ளன. சுற்றுலா நிறுவன இயக்குநர் சதீஷ் என்பவர் இதுகுறித்து கூறுகையில், "ஏற்கனவே ஜனவரி, பிப்ரவரி விடுமுறை தினங்களுக்காக எங்கள் நிறுவனத்திடம் சுற்றுலா பயணிகள் விவரம் கேட்கத் தொடங்கிவிட்டனர். துபாய், ஹைதராபாத், குடகு, கேரளா, கொங்கன், கோவா, ஹம்பி போன்ற பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா செல்ல விரும்பி பலரும் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர் என்றார்.