மொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிய தாசில்தார் விஜயா.. 2019ஐ அதிர வைத்த தெலுங்கானா கொலை
பெண் தாசில்தாரை கொன்ற சம்பவம் மறக்க முடியாத ஒன்றாகும்
அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: இந்த வருடம் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று பெண் தாசில்தார் விஜயாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் ஆகும்.. உயிரோடு ஒரு பெண் அதிகாரி எரிந்ததை கண்டு அங்கிருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அலறியதை நாடு மறக்காது!
நவம்பர் 4-ம் தேதி நடந்த சம்பவம் இதுதான்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அப்துல்லாபூர்மேட் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் அங்கு தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி
அதே பகுதியை சேர்ந்த விவசாயியான சுரேஷ்.. விவசாய நிலம் ஒன்றை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி வருவாய் துறையினர் பட்டா புத்தகம் வழங்கியது பற்றி தாசில்தாரிடம் முறையிட்டார். இது சம்பந்தமாக 15 நாட்களாக தொடர்ந்து தாசில்தார் ஆபீசுக்கு வந்து போய் கொண்டும் இருந்தார்.
ஆத்திரம்
இது தொடர்பாக ஏற்கனவே அப்துல்லாபூர்மேட் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார். ரங்கா ரெட்டி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால், தன்னுடைய நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் வழங்கிவிட்டதால் நடவடிக்கை இல்லாததை கண்டு, கடுமையான ஆத்திரம் விஜயா மீது ஏற்பட்டது.
சுரேஷ்
அதனால், சம்பவத்தன்று தாசில்தார் ஆபீசுக்கு மதியம் வந்த சுரேஷ், விஜயா ரெட்டி அறைக்குள் சென்று, கதவை பூட்டிவிட்டு விஜயா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார். இதில், விஜயா முழுவதுமாக எரிந்து கருகினார். அவரை காப்பாற்ற சென்ற கார் டிரைவருக்கும் தீ பரவி காயம் ஏற்பட்டது.
பரிதாப பலி
அதேபோல, விஜயா மீது பற்றிய தீ பக்கத்தில் இருந்த சுரேஷ் மீதும் பற்றியது. 65 சதவிகிதத்துக்கு மேல் சுரேஷ் தீக்காயம் அடைந்து உஸ்மானியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், சுரேஷுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வந்தது.
வாக்குமூலம்
அந்த சமயத்தில்தான் ஆஸ்பத்திரியில் சுரேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, "என் நிலைத்தை இன்னொருத்தர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் தந்துட்டாங்க.. இதுக்கு உதவி செய்யணும்னு பலமுறை அதிகாரிகளை கேட்டுக்கிட்டேன்.. ஆனா தாசில்தார் எனக்கு சரியான பதிலை சொல்லல. அதனாலதான் பிளான் பண்ணி பெட்ரோல் எடுத்துட்டு போய் அவங்க மீது தீ வைத்து கொலை செய்தேன். பின்னர் சரணடைந்து விடுகிறேன்" என்று சிகிச்சையின்போது சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் சுரேஷும் 2 நாட்களில் உயிரிழந்துவிட்டார்.
அவகாசம்
இந்த சம்பவம் குறித்து ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "மின்னல் வேகத்தில் எல்லாமே நடந்து போச்சுங்க. விஜயா ரெட்டியை காப்பாற்றுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அனேகமாக அந்த நபர் பெட்ரோல் ஊற்றித்தான் தீ வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். காரணம், விஜயா ரெட்டியின் உடலில் பற்றிய தீ வேகமாக பரவி அவரை சாம்பலாக்கி விட்டது. மண்ணெண்ணெய்யால் இவ்வளவு வேகமாக எரிய முடியாது. மொத்தமே 3 நிமிடம்தான். துடிக்க துடிக்க எரிந்து போய் விட்டார் விஜயா ரெட்டி என்றனர்.
வேலைப்பளு
அன்றைய தினம் 1.30 மணிக்கு தனது அலுவலகம் வந்துள்ளார் விஜயா. அன்று குறை தீர்ப்பு நாள் என்பதால் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். மதிய உணவு கூட சாப்பிடவில்லை. அத்தனை கடுமையான வேலைப்பளுவில் இருந்துள்ளார்.
அதிர்ச்சி
அவரது அறைக்கு வெளியே ஏராளமான பேர் காத்திருந்த காரணத்தால் பிறகு சாப்பிட்டுக்கலாம் என்று கூறி விட்டு சென்ற அடுத்த சில நிமிடங்களில்தான் இந்த கோரம் நடந்து முடிந்தது. தெலுங்கானா மாநிலமே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைந்து போனது. இப்படி ஒரு பெண் தாசில்தாரை ஈவு இரக்கமே இல்லாமல், உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.