மேற்குவங்க சட்டசபை தேர்தல்...காங்கிரஸ் இடது சாரி கூட்டணி...அதிர் ரஞ்சன் அச்சாரம்!!
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சிபிஐ தலைமையிலான இடது சாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக மேற்குவங்க மாநிலத்துக்கான காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது அறிவிப்புக்கு சாதகமாக பதிளை சிபிஎம் அளித்துள்ளது. மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணமூல் கட்சிகளை சந்திக்க காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக செய்தியாளர்களுக்கு அதிர் ரஞ்சன் பேட்டியளித்தார். அப்போது, ''கூட்டணி விஷயத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றம் இல்லை. முன்பு சிபிஎம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இருந்தது. இதையடுத்து, காங்கிரசுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக காங்கிரஸ், இடது சாரி கூட்டணிகளுக்குள் அரசியல் புரிந்துணர்வு ஏற்பட்டு, ஒருங்கிணைப்பு வலுப் பெற்றுள்ளது.
இந்த அரசியல் புரிந்துணர்வை நாங்கள் இனி தேர்தல் புரிந்துணர்வு ஒப்பந்தமாக மாற்றி, ஊழலில் திளைத்துக் கொண்டு இருக்கும் திரிணமூல் கட்சிக்கு எதிராக களத்தை சந்திக்க உள்ளோம். காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் மதசார்பற்ற கொள்கை, வகுப்புவாத, மதச்சார்பு கொள்கை கொண்ட பாஜக மற்றும் திரிணமூல் கட்சிகளை தோற்கடிக்கும்'' என்றார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜூலை 30ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் தலைவராக இருந்த சோமன் மித்ரா காலமானார். இதையடுத்து அந்த இடத்துக்கு அதிர் ரஞ்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டாவது முறையாக இந்த மாநில காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக 2014 - 2018ஆம் ஆண்டில் தலைவராக இருந்தார். இவரது முயற்சியின் காரணமாக கடந்த 2016 தேர்தலின்போது, இடது சாரியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து இருந்தது. ஆனால், 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகளில் புரிந்துணர்வு ஏற்படாத காரணத்தால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ்...நியாயமான கட்டணம் நிர்ணயிக்க... மாநிலங்களுக்கு...உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
தற்போது மாநிலத்தில் ஆளும் திரிணமூல் மற்றும் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று சிபிஎம் அழைப்பு விடுத்துள்ளது.
இவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ், ''2016ல் சிபிஎம் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. இந்த முறையும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். மக்கள் பாஜகவுடன் கூட்டு சேருவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.