மே.வங்கம்: பாஜகவுக்கு இப்ப தோல்விதான்... வாக்குகளோ வேற லெவல்.... செங்கொடி மண்ணில் காவிக் கொடி ரெடி?
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க 3 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தல் வெற்றியானது திரிணாமுல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் பாஜகவினருக்கு மிகப் பெரும் எழுச்சியைத் தந்திருக்கும் முடிவுகள் என்பதில் மிகையில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிகளின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது திரிணாமுல் காங்கிரஸ். 2011 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் காங்கிரஸ், எஸ்சியூசிஐ(சி) ஆகியவை இணைந்து போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. மொத்தம் உள்ள 294 இடங்களில் 227 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது.
திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் 184 இடங்களில் வென்றது. அம்மாநிலத்தின் முதல்வராக மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். இந்த வெற்றி அத்தியாயம் 2016-ம் ஆண்டிலும் தொடர்ந்தது. அத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 இடங்களில் வென்றது. இந்த தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சவாலாக இருந்தது இடதுசாரிகள்தான். பாஜக எனும் கட்சியால் கால் வைக்கவே முடியாத ஒரு களமாக மே.வங்கம் இருந்தது.
மே.வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் வெற்றி.. அராஜக அரசியலை மக்கள் நிராகரித்தனர்- மமதா
இடதுசாரிகள் ஜம்ப்
ஆனால் களநிலவரம் லோக்சபா தேர்தலின் போதே மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் சாரை சாரையாக அப்படியே முழுமையாக பாஜகவினராக மாறிப் போனார்கள். லால் சலாம் என செங்கொடி ஏந்தி முழக்கமிட்டவர்கள் ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டு தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டனர். இதன் விளைவு தனிக்காட்டு ராஜாவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸுக்கு கடிவாளம் போடும் இடத்துக்கு பாஜக முன்னேறியது.
பாஜக வெற்றி
2014 லோக்சபா தேர்தலில் 34 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றிருந்தது. அப்போது பாஜக வென்றது வெறும் 2 இடங்களில்தான். இத்தனைக்கும் 2014-ல் மோடி அலை நாடு முழுவதும் வீசியும் மேற்கு வங்கத்தில் அது கரை சேரவில்லை. 2019 தேர்தல் முடிவுகள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களையும் கைப்பற்றியது. 201 தேர்தலை ஒப்பிடுகையில் திரிணாமுல் காங்கிரஸ் 12 தொகுதிகளை இழந்தது. பாஜகவோ 16 தொகுதிகளில் கொடியை பறக்கவிட்டது.
இடைத்தேர்தல் முடிவுகள்
2021 சட்டசபை தேர்தல் களத்தை எதிர்கொள்ள இப்போதிருந்தே மமதா பானர்ஜி தயாராகி வருகிறார். இதற்காக தேர்தல் வல்லுநர் பிரஷாந்த் கிஷோரின் உதவியையும் அவர் நாடி இருக்கிறார். இடதுசாரிகளே உருமாறிவிட்ட நிலையில் வங்கத்து கோட்டை நமதே என வேட்கையுடன் களத்தில் நிற்கிறது பாஜக. இதனை நிரூபிக்கும் வகையில்தான் தற்போதைய 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தின் காலியாகஞ்ச்(தனி), கரீம்பூர், கக்ராபூர் சாதர் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணி
இம்மூன்று தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காலியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல், கான்ங்கிரஸ், பாஜக, சிபிஐ எம்-எல் (லிபரேசன்) ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தின. காங்கிரஸ் வேட்பாளரை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது. இத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 97428 வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜக வேட்பாளரோ 95014 வாக்குகள் பெற்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் 18857 மட்டும்தான்.
வாக்குகள் நிலவரம்
கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 103278; பாஜகவுக்கு 79368 வாக்குகள் கிடைத்தன. இங்கு சிபிஎம் வேட்பாளருக்கு கிடைத்ததும் 18627 வாக்குகள்தான். இத்தனைக்கும் சிபிஎம் வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது. கக்ராக்பூர் சாதர் ட்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 72893, பாஜகவுக்கு 52040 வாக்குகள் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 22631 வாக்குகள்தான் கிடைத்தன. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான 3 தொகுதிகளில் 2-ல் பாஜகதான் 2-வது இடம். இந்த 2-வது இடத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத இடைவெளியில் சிபிஎம்- காங்கிரஸ் வேட்பாளர்கள்.
காத்திருக்கும் அக்னி பரீட்சை
இத்தேர்தலானது 2021 சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக் கூடும் என்கிற ஒரு தோற்றத்தைத் தராமல் இல்லை. கடந்த காலங்களைப் போல திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறலாம்... அது மகத்தானதாக இருக்கப் போவதில்லை... மிகப் பெரும் அக்னி பரீட்சையாகத்தான் இருக்கப் போகிறது; ஏனெனில் பாஜகவின் விஸ்வரூபமானது மமதா கட்சியின் வெற்றியை சொற்ப ஆயிரம், நூறு வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அறுவடை செய்துவிடக் கூடிய சமிக்ஞையாக இத்தேர்தல் இருக்கிறது.
அச்சத்தில் மமதா
இதை உணர்ந்துதான் தற்போதைய தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மமதா பானர்ஜி, காங்கிரஸ்-சிபிஎம் தங்களை பலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பாஜகவை வலிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அடுத்த தேர்தலில் செங்கொடி பறந்த வங்கத்து தேசத்தில் காவிக் கொடி நிச்சயம் எதிர்க்கட்சியாக அமருவதை உறுதிப்படுத்துகிறது இத்தேர்தல் முடிவுகளின் போக்குகள். அது ஆளும் கட்சியாக கோட்டைக்கு போகுமா? அதை மமதா பானர்ஜி தடுத்து நிறுத்துவாரா? என்பதை தேசம் பார்க்க காத்திருக்கிறது.