திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 21 மணிநேரம் காத்திருப்பு
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானவர்கள் திருமலைக்கு வருவது வாடிக்கை.
அனைத்து மாநிலங்களிலும் தேர்வு முடிந்து பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் தின விடுமுறைகள் காரணமாகவும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை தர்ம தரிசன பக்தர்கள் 31 கம்பார்ட்மென்ட்களை கடந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும், நடைபாதை பக்தர்கள் 12 கம்பார்ட்மென்ட்களிலும், ரூ.300 விரைவு தரிசன பக்தர்கள் 6 கம்பார்ட்மென்ட்களிலும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.
கிறிஸ்துமஸ் தினமான புதன்கிழமையன்று தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 21 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்தில் 7 மணிநேரமும் காத்திருந்தனர்.
புதன்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 36,456 பக்தர்களும் செவ்வாய்க்கிழமை முழுவதும் 61,412 பக்தர்களும் ஏழுமலையானை தரிசித்தனர்.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் விஐபி பிரேக் தரிசனத்தை, லகு தரிசனமாக தேவஸ்தானம் மாற்றியுள்ளது.