21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது
21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
டெல்லி : 21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார். குடியரசு தின விழா நிகழ்வில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழாவில் சிறப்பாக சேவை புரிந்த காவல்துறையினருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்குவார். அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் விருது பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில் வீர தீர செயல் புரிந்ததற்காக 107 பேரும், காவல்துறைக்கு பெருமை சேர்த்ததற்காக 75 பேரும், மெச்சத்தக்க வகையில் பணி புரிந்தமைக்காக 613 பேர் என மொத்தம் 795 காவல்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு விருது பெற உள்ளனர்.
இதில், வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான விருது வாங்கும் 107 பேரில் 66 அதிகாரிகள் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 35 பேர் இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தியதற்காகவும், மூன்று பேர் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பாக செயலாற்றியதற்காகவும் இந்த விருதினை பெறுகிறார்கள்.
மேலும், மெச்சத்தக்க வகையில் பணி புரிந்த அதிகாரிகள் பட்டியலில் 21 தமிழக அதிகாரிகள் குடியரசுத் தலைவரிடம் விருது பெற உள்ளனர். அதில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லஷ்மி, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி லலிதா லஷ்மி உள்ளிட்ட ஐந்து பெண் காவல்துறை அதிகாரிகளும் இடம் பெற்று உள்ளனர்.