மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டி, 6 போலீசாரை கடித்த இளம்பெண்
மும்பை: மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டியதுடன் 6 போலீசாரை கடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் கௌரி பிதே(21). அவர் புதன்கிழமை இரவு குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். போடார் மருத்துவமனை அருகே உள்ள சாலை தடுப்பில் காரை மோதினார்.
அப்போது காரில் அவரது நண்பர்கள் சிராக் போதியா(21), கபில் ராத்தோட்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரில் 6 பேரை கௌரி கடித்து, அடித்து, துப்பியுள்ளார்.
போலீசார் ஒரு வழியாக கௌரி மற்றும் அவரது நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த 4 பேரும் சேர்ந்து காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கௌரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கௌரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கௌரிக்கு பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் மேல்படிப்பு படிக்க சீட் கிடைத்துள்ளது. பெங்களூருக்கு கிளம்பவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.